Tuesday, May 26, 2020

வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகள் கடைபிடியுங்கள்.



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, பித்ரு தோஷம் கட்டுப்பட நாம் மேற்கொள்ளவேண்டிய பரிகாரம் பற்றியதாகும்.

இறைவன் நமக்கு வருடத்தில் மூன்று சக்திவாய்ந்த அமாவாசை களை உருவாக்கித்தருகின்றார். ஒன்று தை அமாவாசை, இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்ற ஆடி அமாவாசை, மஹாளய பச்ச அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளிலே பித்ருக்களை நாம் நினைவு கூற வேண்டும். ஏனென்றால், நம் ஜனன ஜாதகத்திலே பித்ரு தொல்லை இருக்கின்றது, பித்ரு சாபம் இருக்கின்றது என்பதை கண்டறிவதற்கான ஜோதிட வாய்ப்பாடுகளை இப்பொழுது காணலாம்.

ஒன்று சூரியன் என்ற கிரகம் நீச்சம் பெற்றிருந்தாலோ அல்லது சூரியன் பகைவர்களின் கால்களிலே இருந்தாலோ அல்லது 9வது இடத்திலே நச்சு கிரகங்கள் இருந்தாலும் சூரியனின் மீது பகை கிரகங்களின் பார்வை விழுந்தாலும் ஒருவரது ஜனன ஜாதகத்திலே இந்த பித்ரு தோஷம் இருக்கிறது.

இந்த பித்ரு தோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பு, கருட புராணம் என்ன சொல்லுகின்றது என்றால், இங்கு நாம் வாழும் பூமி மண்டலத்திலிருந்து ஒன்பதே கால் கோடி மைல்களுக்கு அப்பால் சூரியன் என்ற ஒரு கிரகம் இருக்கின்றது. அந்தச் சூரிய கிரகத்திலிருந்து ஒன்பதே கால் கோடி மைல்களுக்கு அப்பால் "பித்ரு லோகம்"

இருக்கிறது.

அந்த பித்ரு லோகத்திலே இருக்கின்ற சூட்சும சரீரத்தை தாங்கி இருப்பவர்களுக்கு உணவு என்னவென்றால், நாம் இங்கே அவர்களை மனதில் நினைத்து அவர்களுக்கு அளிக்கும் எள்ளானது அவர்களுக்கு அமிர்தமாக மாறிவிடும். அதைபெற்ற சூரியன் பித்ரு தேவதைகளிடம் ஒப்படைத்து அவர்களின் மூலமாக நம் பித்ருக்களின் பசியை போக்குகிறது.

நம் உலகத்திற்கும், பித்ருக்களின் உலகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நம் உலகக் கணக்கின்படி காணும் போது,365 நாட்கள் கொண்டது ஒரு வருடம். நமது ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள் கணக்காகும்.

உதாரணமாக, நமது பாட்டன் இறந்து நிலவுலக கணக்கின் படி 50 வருடங்கள் என்பது அங்கே 50 நாட்களாக மாறும்.

பித்ருகளுக்கு சரிவர திதி, திவசம், தர்ப்பணம் செய்யவில்லையென்றால், அவர்கள் மனதில் புழுங்கி வடிக்கும் கண்ணீர் நம் சந்ததியையே பாதிக்கும்.

எப்படி நம் பாட்டனுக்கு, தந்தைக்கு அல்லது நம் முன்னோர்களுக்கு திதி செய்யவில்லையேன்றால் நம்மை எப்படி பாதிக்கின்றது என்றால், நம் உடலில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள் என்றும், அவர்களின் குறைகள் நிவர்த்தியாகும் வரை இவ்வுலகை விட்டு அவர்கள் அகலமாட்டார்கள் என்றும் கருட புராணம் கூறுகிறது.

ஆகவே, அவர்களுக்குரிய திதி, தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாக செய்வது ஒன்றே அவர்களுக்கு நிச்சயமாக விடுதலை அளிக்கும். அதனால் இந்த ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து, திதி.திவசம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இன்பமாக வாழவேண்டும்.என்றுகூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment