Saturday, January 30, 2021

ருத்ராட்சம் அணிய விரும்பினால் படியுங்கள்.

ருத்ராட்சம் அணிய விரும்பினால்...

கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு  மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள். 

ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். 
  
திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் 
(ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே!  

ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு  ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில்  மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார். 

இவ்வுலகில் பிறந்த அனைவரும்  ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.

ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம்  பலன்களை  கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது. 

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.

அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம், தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார்.

அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். பக்தியுடன் அதை அணிபவரை எப்பொழுதும் கண்போலக் காப்பாற்றுவார் . எனவே அனைவரும்  ஒரு ஐந்து முகம்  ருத்ராட்சம் கழுத்தில் எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா?

ஆமாம்! ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். 
பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.. 

எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?

குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா! நோய் உள்ளவனுக்குத்தான் மருந்து தேவைப்படுகிறது நோய் இல்லாதவருக்கு மருந்து தேவையில்லை. அது போல வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், சிரமங்களில் தவிப்பவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்,

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,  கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், பிரச்சனைகளில் உலாவி கொண்டே இருப்பவர்கள், நாம் எதற்காகப் பிறந்தோம் என்று வேதனைப்பட்டு கொண்டிருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், (ஊனமுற்றோர்) மனநிலை, பாதித்தவர்கள், இவர்கள் அனைவரும் ருத்ராட்சம் அணியவேண்டும். இவர்களுக்காக தான் ருத்ராட்சம் இறைவனால் அருளப்பட்டது.

ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும் எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு உடனே ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக  விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடவேக்கூடாது). 

ருத்ராட்சம் அணிந்தது முதல் 10008 நாட்களுக்குள்  முழுவதுமாக விட்டுவிட வேண்டும். சுத்த சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும் அதுவே உத்தமமானது.

ருத்ராட்சதில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்?

ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.

அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதாக, மிகமிக சகாயமான விலையில் சகல மானோரும் அணிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில்  ஐந்து முக ருத்ராட்ஷத்தையே இறைவன் அதிகமாக விளைச்சல் (படைக்கின்றார்) விளைவிக்கிறார் அனைவரும் ஒரு ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே சிறந்தது அதுவே போதுமானது. பகவான் சிவபெருமான் திருமுகம் ஐந்து, நமசிவாய ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), நமது கை கால் விரல்கள் ஐந்து, புலன்கள் ஐந்து. இப்படி ஐந்தை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம் ஐந்திற்கும் இவ்வுலகிற்கும் அதிகமான சம்பந்தம் உண்டு மற்றும் சிவபெருமான் புரியும் கரும (தொழில்)  காரியங்கள் ஐந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஆகையால்  ஐந்து முக ருத்ராட்சத்தையே நமக்காக மிக மிக அதிகமாக படைக்கின்றார்.  ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? 

நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும். 
மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் (கொடியில்) கயிற்றில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்ற வற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? 

இவற்றைப் போல் ருத்ராட்சத்தையும் தாலி கயிற்றில் கோர்த்து கட்டிக்கொண்டு எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிந்து இருக்க வேண்டும். ருத்ராட்சம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. 

நமது 💖 உயிரின் ஆன்மாவிற்காகவே நாம் அனைவரும் பிறவிப்பயன் அடைய வேண்டியே சிவபெருமானால் அருளப்பட்டது.

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

ஆம் இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் - பெண் 
 இருபாலரும் கண்டிப்பாக கழுத்தில் ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே பிறந்துள்ளோம் 
 நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், துன்பம், துயரம், துக்கம், வேதனை,  வலி கஷ்டம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் ருத்ராட்சம் அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால்  மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும். ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம்.

ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் வேதனையையும் கொடுப்பாரா?. நம்மை நல்வழிப் படுத்துவதற்காக வலியுறுத்துவாரே தவிர நம் வாழ்வைக் கெடுக்க மாட்டார்  அதனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும். ருத்ராட்சதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய தினந்தோறும் 108 முறை சொல்லி  வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), இறப்பு வீடு, பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்ய நேரங்களில் ருத்ராட்சம் அணியலாமா?

கண்டிப்பாக அணியலாம்
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் திதி போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்சம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும்  இறந்தவர்களின் ஆன்மா மோட்சம் பெரும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போதும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து இருக்கலாம் அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?

நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.

மேலும் ருத்ராட்சம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும்  ஆனந்தமும் கிடைக்கும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.

இது மட்டுமல்ல ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. 
எனது அனுபவத்தில் நானும் 100% கண்ட உண்மை எனவே தூங்கும்போது கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க கூடாது.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் பிரார்த்தனை வைப்பவர்களும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தினந்தோறும் ஓம் நமசிவாய என்று 108 முறை எழுதியும்.  காலை தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மனதினுள் 1008 முறை ஓம் நமசிவாய சொல்லியும் வந்தால்  மேற்கூறிய பிரார்த்தனைகள் கண்டிப்பாக 1008 நாட்களுக்குள் நிறைவேறும். இது என் அனுபவத்தில் கண்டு அனுபவித்த உண்மை. 

இறைவனின் கருணையால் அடியேன் 1993 முதல் 25 வருடங்களாக இன்றுவரை தினந்தோறும் 108 முறை ஓம் நமசிவாய எழுதி வருகிறேன். இதே போன்று நீங்களும் எழுதி வாருங்கள் நமது உடம்பின் சக்தியை (பேட்டரியை சார்ஜ்) அதிகப்படுத்தி கொள்ளுங்கள் 

ருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இறைவன் சிவபெருமான் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட 
ஓம் நமசிவாய நம்மால் சொல்ல முடியும். 

அப்படியிருக்க நாம் பிறவிப்பயன் அடைய வேண்டி நமக்காக ருத்ராட்சத்தை  அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்சம் அணிதல், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் இம்மூன்றும் ஒருவர் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவது உறுதி இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள்  (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) நமக்கு நன்மையே செய்யும் தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.
 
ருத்ராட்சம் அணிந்திருக்கும் வேளையில் ஒருவர் உயிர் பிரிந்தால் அவர்கள் சிவபெருமானின் திருவடியையே அடைவார்கள்  நற்கதி முக்தி எற்படும்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், எந்திரம் இவை அனைத்தும் ருத்ராட்சம் கழுத்தில் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. மாறாக அவர்களுக்கு நன்மையே செய்யும் ஆகையால் ஒவ்வொருவரும் பயம் கொள்ளாமல் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியலாம். 

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்சம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்சம் மற்றும் நமசிவாய என்ற நாம ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நமக்கு நன்மை செய்கின்றார்கள் அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களை சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.

ருத்ராட்சம் அணிந்த பின் அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். 

ருத்ராட்சம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ஒரு வினாடி நேரம் கூட ருத்ராட்சதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்சம் அணியவில்லை என்றால் அவர்கள் பிறந்தும் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஐந்து முக ஒரு ருத்ராட்சம் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொண்டே இருக்க வேண்டும். 

Friday, January 29, 2021

சிதம்பரம் ரகசியம் போல ஆலங்காட்டு ரகசியம்.

சிவாயநம நமசிவாய 

*அது என்ன?.., ஆலங்காட்டு ரகசியம்…..?*

*சிதம்பர ரகசியம் னு ஒன்னு இருப்பது எல்லோருக்குத் தெரியும்.*
*அதுபோல ஆலங்காட்டு ரகசியம்னு ஒன்னும் இருக்கு.*
*நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர்.*
*நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும்.*
*இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராககோயில் கொண்டருளுகிறார்.*
*இதை, ரத்தின சபைஎன்று போற்றப்படுகிறது.*
*சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள்.*
*அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. நிறையவர்க்குத் தெரியுமோ?, தெரியாதோ!, தெரியாது.*
*சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார்.*
*இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள்.*
*அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார்.*
*வெகு அருகே வந்துவிட்ட காரைக்காலம்மையாரை, என்ன வரம் வேண்டும்?என சிவபெருமான் கேட்டபோது…..*
*அதற்கு காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.*
*அம்மை கேட்ட வரத்தை, அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவபெருமான்.*
*அந்தசமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார் சிவபெருமான்.*
*காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோயிலில் தங்கப் போகிறார், எனவே எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னிதியை நீ எழுப்பும்படி கூறிவிட்டு மறைந்தருளினார்.*
*அதன்படியே அம்மன்னனும், நடராஜருக்கு பின்புறம் உள்ள இடத்தில், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பி கட்டிவித்தான்.*
*சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்காலம்மையாரும், அதனுள் ஐக்கியமானார்.*
*இன்றுவரை இந்த நிமிட அளவிலும், இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக்* *கொண்டிருப்பதாக ஐதீகம்.*

*இதுவே, ஆலங்காட்டு ரகசியம்*.
*இந்த திருத்தலம் சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல பக்தர்களுக்குத் தீர்த்தத்தையே இங்கு வழங்குகின்றனர்.*
*ஆச்சரிய அம்பிகை:*
*நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர்.*
*சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள்.*
*இதனால் அவளுக்கு சமிசீனாம்பிகை என்று பெயர் ஏற்ப்பட்டது.*
*இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள்.*

*இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.*
*நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர்.*
*சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார்.*
*இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.*

*நடுவர்களாக இருவர்:*
*சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார்.*
*இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் வளர்ந்து மூடியது.*
*இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்)என பெயர் வந்தது.*

*அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவற்றுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது.*
*இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார்.*
*சிவநடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.*
*நாட்டிய காளி:*
*நடராஜருடன் போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோயில்இங்கு உள்ளது.*

*இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்.*
*இக்கலிகால வாழ்வு, மிக அபரீத ஆசைகளை உள்ளடக்கிக் கொண்டவை.*
*இதில் வாழ்ந்து வரும்போது, நிறைய வினைப் பெருக்கங்களை பெருக்கி அதன் இயல்பாகவே வாழ்கிறோம்.*
*வாழ்வில் எது கிடைத்தாலும், சேமித்து வைத்தாலும், அது நமக்காக அது சொந்தமாகாது.*
*இறுதியில், நம் இறப்புக்கு அப்புறம், அது நம் உறவுகளுக்கோ, அடுத்தவர்க்கோ போய் விடும், அவர்களுக்கும் இதே நிலைதான்.*
*என்றும் இறுதி வரையும் ஒன்று மட்டுமே நம்மோடு இருக்கும், அது தானம் தர்மம் புண்ணியம் மட்டுமே.*

*இதைச் செய்யாது விட்டோர், பின் விளைவு கண்டு வருந்துவர்.*
*இருப்பினும்,*
*பிறவாமையைப் பெற்றுக் கொள்வதுதான், கடைசி வழி.*
*நம் செயலும், சிந்தனையும் நல்லதாக இருக்க வேண்டுமென்றால், நாம் சிவநெறிக்குள்ளாக பயணிக்க வேண்டும்.*
*பிறந்தோம், வாழ்கிறோம் என இருந்திடல் கூடாது.*
*இனி இறப்பென்று ஒன்று நமக்கு வருமே?*
*நமக்கு, பிறவா நிலையொன்று ஒன்று வேண்டுமே!, அது முக்கியமல்லவா?*
*இந்த எண்ணம் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உயிருக்கும் வர வேண்டும்.*
*இப்பிறப்பில், கர்ம வினைப் பயன்கள் இனி தொடராதிருந்து, பிறவிப்பயனை முடித்து, மீண்டும் பிறவாமையை பெற வேண்டுமே?*
*அதனால்தான்,*
*பிறப்பை வெறுத்து, பிறவாமைக்கு முற்பட வேண்டுவது.*
*சிவன் இல்லையேல் இப் புவனம் இல்லை*
*சிவன் இல்லையேல் சலனம் இல்லை!*
*சிவன் இல்லையேல் பயணம் இல்லை!*
*சிவன் இல்லையேல் எதுவும் இல்லை!*
*சிவன் இல்லையேல் சக்தி இல்லை!*
*அந்தச் சிவன் இல்லையேல் எந்த ஜீவன் இல்லை!*
*சிவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை!*
*என்றும் எதற்கும், எல்லையே இல்லாதவை சிவனே!!*
*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*
*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*

Thursday, January 28, 2021

நமக்கு ஏன் கஷ்டங்கள் வருகிறது.

✍️கேள்வி..
நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனக்கு என்ன சந்தேகம் என்றால் போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பலனை சென்ற ஜென்மத்திலேயே அனுபவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 
சென்ற ஜென்ம ஞாபகம் துளியும் இல்லாத போது நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை சென்ற ஜென்மத்தில் செய்த பாவங்கள்தான் காரணம் என்று கூறும் போது அதனை மனது ஏற்க மறுக்கிறது. 
....
பதில்..
போனஜன்மத்தின் ஞாபகத்தோடு ஒருவர் பிறப்பதாக வைத்துக்கொள்வோம்,அப்போது என்ன நடக்கும்?
குழந்தை பிறந்து பேச கற்றுக்கொண்டவுடனேயே போனஜன்மத்து ஞானங்கள் அதன் மனதில் தோன்றும்,
அது இந்த ஜன்மத்து அப்பா அம்மாவை விட்டு விட்டு போன ஜன்மத்து அம்மா அப்பாவை தேடி அலையும்.
போன ஜன்மத்தில் தன்னுடைய மனைவியை தேடி அலையும்.
ஒருவேளை போன ஜன்மத்தில் யாராவது இவனை கொலை செய்திருந்தால்,பழி தீர்ப்பதற்காக அலைவான்.
அத்தோடு அதற்கு முந்திய பல பிறவி ஞாபகங்களும் வரும்,
இது மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி அவனை பைத்தியமாக்கிவிடும்
..
அதேநேரத்தில் போன ஜன்மங்களின் நினைவுகள் முற்றிலும் அழியவில்லை. நாம் விரும்பினால் அவைகளை நியாபகத்தில் கொண்டுவர முடியும்.
அதற்கு தனியாக மனத்தை பக்குவப்படுத்தும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பிறரது முந்தைய பிறவிகளை நியாபகத்தில் கொண்டுவரும் மனஇயல் வல்லுனர்கள் இருக்கிறார்கள்.
எனவே  பழைய நியாபகங்கள் எதுவும் அழியவில்லை.அவைகள் அப்படியே பாதுகாப்பாக உள்ளது.
இதை நமது வாழ்நாளிலேயே பார்க்கலாம்.
..
சிலர் ஒரு இடத்தில் நீண்டகாலம் பணியாற்றிக்கொண்டிருப்பார். திடீரென்று பணி மாறுதல் ஏற்பட்டு வெளிநாடு சென்றுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது ஏற்கனவே வாழ்ந்த பழையஇடத்தின் நினைவுகள் படிப்படியாக ஆழ்மனதிற்குள் செல்ல ஆரம்பிக்கும். புதிய இடத்தின் நினைவுகள் மேலோங்கியிருக்கும்.காலம் செல்ல செல்ல பழைய இடங்களின் நினைவுகளில் பல அழிந்துபோனதுபோல தோன்றும்.
ஒருவேளை பல ஆண்டுகளுக்குப்பிறகு பழைய நண்பர் ஒருவர் நம்மைக்காண வந்தால்கூட,இவரை எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று தோன்றும்,அவரைப்பற்றிய முழு விபரங்களுடன் உடனே நம்மனதில் தோன்றுவதில்லை.
உதாரணமாக நாம் சிறுவயதில் வாழ்ந்த அத்தனை நாட்களையும் நினைவில் கொண்டுவர முடியாது.சிறுவயது நண்பர்களின் முகம்கூட அழிந்துபோயிருக்கும்.ஏனென்றால் அந்த நினைவுகள்  ஆழ்மனதிற்குள் சென்றுவிட்டன.
..
இந்த பிறவியிலேயே சிறுவயது வாழ்க்கையைக்கூட நம்மால் நியாபகத்தில் கொண்டுர முடிவதில்லை.
மரணத்திற்கு பிறகு பழைய நியாபகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக ஒருவனிடமே இருக்கிறது.அவைகள் அழிவதில்லை.
அந்த ஞாபகம் இருப்பதால்தான் இறந்தவரின் ஆவி தனது சொந்தக்காரர்களை அடையாளம் காண்கிறது.
..
நமது உடல் தூல மற்றும் சூட்சம உடலால் ஆனது. நினைவுகள் அனைத்தும் சூட்சும உடலில்தான் பதியப்பட்டிருக்கும்.
தூலஉடல் அழிந்தாலும் சூட்சும உடல் அழியாது.நினைவுகள் அப்படியே இருக்கும்.
தான் செய்த தவறுகளை நினைத்து இறந்த ஆவி வருத்தப்படும்.
..
வயது முதிர்த்த காலத்தில் ஒருவர் படுத்தபடுக்கையாக கிடக்கிறார்.உடல் கிட்டதட்ட அசைவற்றுவிடுகிறது. அந்த நேரத்தில் மனம் மிகவும் வலிமையாக செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.பல்வேறு நினைவுகள் மனத்தை சூழ்ந்துகொண்டெ இருக்கும். சிறுவயது ஞாபகங்கள் அப்போது எழும். அத்துடன் முந்தைய பிறவி ஞாபகங்கள்கூட வரலாம்.சிலநேரம் அவர்கள் அழுவார்கள் சிலநேரம் சிரிப்பார்கள்.
அந்த நிலையிலேயே அவர் உடலைவிட்டுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போதும் அவரது மனதில் அந்தபிறவி மற்றும் முந்தைய பிறவிகளின் சிந்தனைகள் எழுந்துகொண்டே இருக்கும்.
..
ஆத்மா சாந்தி அடைதல் என்றால் என்ன?
அப்படி பல்வேறு சிந்தனைகளுடன் ஒருவர் இறந்துபோன பிறகும் அவரது ஜீவாத்மா குழப்பத்துடனேயே இருக்கும்.
அந்த நிலையில் ஞானத்தை ஊட்டும் பாடல்களைப் பாடுவார்கள்.
ஞானப்பாடல்களை பாடும் ஞானிகளை அழைத்துவருவார்கள்.
பக்திபாடல்களைப் பாடுவார்கள்.அப்போது அந்த ஜீவாத்மாவிற்கு வைராக்கியம் ஏற்படும்.உலகத்தின்மீதும்,சொந்தங்களின்மீதும் உள்ள பற்று விலகும்.
உலகத்தின்மீது தீவிர வைராக்கியம் ஏற்படும்போது,ஏற்கனவே பலமுறை பிறந்துபிறந்து இறந்துவிட்டோம்,மீண்டும் இந்த உலக வாழ்க்கை வேண்டாம் என்று தோன்றும்.
அப்போது ஆத்மா சாந்தி அடைகிறது. மனதின் சமநிலையை அடைகிறது.நிலைத்த அமைதியை அடைகிறது.
..
மேலே கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இன்னமும் முடியவில்லை.
..
ஒருவேளை ஒவ்வொருவரும் அந்த பிறவியில் செய்த பாவங்களை அந்த பிறவியிலேயே அனுபவித்து முடித்தாக வேண்டும் என்று விதி இருந்தால் என்னவாகும்?
சிலர் தெரிந்தே பாவகாரியங்களை செய்வார்கள். அந்த பாவத்தின் பலனை அனுபவித்து முடிக்கும்வரை அவனுக்கு மரணம் ஏற்படாதே! எனவே தொடந்து பாவங்களை செய்துகொண்டே மரணமில்லாமல் வாழ்ந்து வருவார்கள். அவனைப்பின்பற்றி அனைவரும் அதேபோல வாழ முயற்சிசெய்வார்கள்.உலகத்தில் பிறப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.ஆனால் மரணம் ஏற்படவே செய்யாது.
இது உலக அழிவிற்கு வழிவகுக்கும் அசுரர்கள் இவ்வாறே வாழ முயற்சித்து தோல்வி அடைந்துள்ளார்கள். அவர்கள் எல்லா பாவங்களையும் செய்வார்கள் அதேநேரம் சாகவரம் வேண்டும் என்று கேட்பார்கள்..அது நடக்காது...
..
முற்பிறவி அனுபவங்களை யாருமே மறைக்கவில்லை..
இறப்பதற்கு முன்பு ஒருவருக்கு என்ன நினைவு இருக்குமோ அதுதான் இறந்தபிறகும் இருக்கும்.
அதன்பிறகு அவர் புதிய உடலுக்குள் செல்லும்போது பழையவை அனைத்தும் மறந்துவிடுகிறது.
அதற்கு காரணம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றுவிடுகிறது.
அந்த உறக்கம் என்பது தினமும் உறங்கும் ஒரு இரவு உறக்கம் அல்ல. பல மாதங்கள் தொடந்து உறங்கும் ஆனந்தஉறக்கம்.
அது பழைய நினைவுகள் அத்தனையும் மறந்துவிடுகிறது.
ஆனந்தம்மேலிடும்போது ஒருவர் அனைத்தையும் மறந்துவிடுகிறார்.அதேபோன்ற நிலை.
..
பழைய நியாபங்களுடன் பிறந்தால் பிறக்கும்போதே அதன் துன்பங்களும் தொடங்கிவிடும்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. தாய்,தந்தை மற்றும் குருவின் வழிகாட்டுதலால் எப்படிப்பட்ட கெட்ட குழந்தையும் நல்லவனாக மாறமுடியும்.
குந்தையின் சிறுவயது வாழ்க்கை ஆனந்தமாக கழிகிறது.
பழைய நியாபகங்கம் எதுவும் இல்லாததால்தான் குழந்தையின் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கிறது.
ஞானியும் அனைத்தையும் மறக்கிறான்.அவனது வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கிறது.
..
இந்த பிறவியில் நான் தவறு செய்யவில்லை. ஆனாலும் முற்பிறவியின் பலனால்தான் துன்பப்படுகிறேன் என்பதை ஒருவன் நம்பினால் அவனுக்கு மனகுழப்பம் ஏற்படுவதில்லை. இந்த துன்பங்களை அனுபவித்து முடித்துவிட்டு மீண்டும் பிறப்பற்ற நிலையை அடைவோம் என்றுதான் அவன் யோசிப்பான்.
..
ஒரு கடவுள் எங்கேயோ அமர்ந்துகொண்டு நமது முந்தைய பிறவிகளின் அனுபவத்தை மறைத்துவைப்பதில்லை.
சில ஞானிகள் பிறக்கும்போதே முற்பிறவி ஞாபகத்துடன் பிறக்கிறார்கள். சிறு வயதிலேயே வீட்டைத்துவந்து தவம்இயற்ற சென்றுவிடுகிறார்கள்.
மிருகங்களுக்கு மனம் இல்லை. எனவே முற்பிறவிகள் எதுவும் அதற்கு தெரியாது.
மனிதமனம் பக்குவம் அடைய அடைய பல பிறவிகளை அறியும் சக்திபெறுகிறது.
...🕉️

Wednesday, January 27, 2021

எல்லா நாட்களும் நல்ல நாட்களாக இருக்க செய்யவேண்டிய வழிபாடு.



எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்க இறைவனைத் துதி பாடி துதிப்பது தான் என்கின்றன புராணங்கள்,

திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.

ஞாயிறு

பலன்

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி

சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி

மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி

ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி

திங்கள்

துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி

சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி

சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி

திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி

செவ்வாய்

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்

எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி

தெய்வானை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி

செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி

புதன்

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்

பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே

உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே

புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருரரக போற்றி

வியாழன்

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்

தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி

தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்

வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி

வெள்ளி

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த

வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!

வள்ளிமலை தேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே

வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி

சனி:

கனிவாய் வள்ளி தெய்வானை கணவர்.

Tuesday, January 26, 2021

பைரவர் எந்த கெடுதியும் நீக்கக் கூடியவர்.

பைரவர், சக்தி வாய்ந்தவர். சதிகளையும் எதிர்ப்புகளையும் முறியடிப்பவர். அந்த ஆலயத்தையே காவலனாக இருந்து காப்பவர். அதுமட்டுமின்றி, தன்னை வணங்கும் சிவ பக்தர்களையெல்லாம் தீய சக்திகள் அண்டாமல் காத்தருள்பவர். ஸ்ரீ காலபைரவர் எல்லோரையும் காத்து அருளட்டும் 

கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு. நடந்துகொண்டிருக்கும் கலியுகத்தில், காலபைரவரே பக்கத்துணையாக இருக்கிறார். அகிலத்து மக்களுக்கு ஒரு குறைவும் நேராமல் அவர் நொடிப்பொழுதில் காத்தருள்கிறார்.

பைரவரின் வாகனம் நாய். எனவே தெருநாய்களுக்கு உணவளித்தாலே பைரவரின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம். அதேபோல், எதிரிகளை வீழ்த்த, எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்க, பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், பைரவருக்கு வடை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் தடைகள் அனைத்தையும் நீக்கி அருள்வார் பைரவர் என்கிறார்கள்.

அஷ்டமி நாளில், பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவாஷ்டகம் பாராயணம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தெருநாய்களுக்கு உணவளியுங்கள். இயலாதெனில், தெருநாய்களுக்கு பிஸ்கட்டாவது வழங்குங்கள்.

பைரவரில் எட்டு வகையான பைரவர்கள் உண்டு. அஷ்ட பைரவர்கள் என்றே அழைக்கப்படுகிறது. இவர்களில், சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு இன்னும் சிறப்புகளைக் கொண்டது. அஷ்டமியிலும் மற்ற நாட்களிலும் பைரவருக்கு செந்நிற மலர்கள் சூட்டியும் பைரவாஷ்டகம் சொல்லியும் வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார் சொர்ணாகர்ஷண பைரவர் என்பது ஐதீகம். இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

 பைரவரை வழிபடுங்கள்; பலன் பெறுங்கள்!

Monday, January 25, 2021

தொழில் சிறப்படைய செய்யுங்கள் இந்த பரிகாரம்.

தொழிலில் சிறந்து விளங்க செய்யவேண்டிய ஹஸ்த்ர வழிபாடு!

தொழிலில் நிரந்தரமாக கால் பதிக்க விரும்புபவர்களும், வீழ்ச்சியடையாத நிலையே எட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தொழிலில் வெற்றி பெற்று, மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவதற்கான வழிமுறையை தான் இன்று காணப்போகிறோம்.
அந்த வழிபாடு தான் ஹஸ்த்ர வழிபாடு. ஹஸ்த்ர வழிபாடு என்றால் என்னவென்றால்? பெருமாள் கையில் இருக்கக்கூடிய சங்கு, சக்கரமாகும்.  இதை அபய ஹஸ்த்ரம் என்று கூறுகிறோம். 
பகவான் விஷ்ணுவின் கையில் இருக்கும் சங்கு சக்கரத்திற்கு அவ்வளவு விஷேசங்களும், மகத்துவமும் வாய்ந்தது. மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவது.  உன்னதமான பலன்களை அள்ளித்தருவது. 
சக்கரத்தை எப்படி உருவாக்குவது? 
சங்கு, சுதர்ஸன சக்கர யந்திரம் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் சங்கு முழுவதும் சில்லறை காசுகளால் நிரப்ப வேண்டும், பின்னர், சுதர்ஸன யந்திரத்தின் மீதும் சில்லறையை வைத்துவிட்டு இந்த மந்திர ஜெபத்தைச் சொல்ல வேண்டும்...
ஸுதர்சனர் மந்திரம்

 **ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய 
கோவிந்தாய, கோபி ஜன வல்லபாய, 
பராய, பரம ப்ருஷாய, பரமாத்மனே, 
பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஔஷத
அஸ்த்ர, சஸ்த்ராணி, ஸம்ஹர, ஸம்ஹர,
ம்ருத்யோர் மோசய, மோசய,
ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய,
ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே, ஜ்வாலா
பரீதாய, ஸர்வதிக் ஷோபன ஹராய, 
ஹும்பட், பரப்ரஹ்மணே, 
பரம்ஜ்யோதிஷே, ஸ்வாஹா

** 
என்ற சுதர்ஸன மூலமந்திரத்தை ஜெபித்துவிட்டு..

ஓம் சுதர்ஸனாய நமக..
ஓம் மஹாவிஷ்னுவே நமக..
ஓம் மஹாலட்சுமியை நமக..
ஓம் மஹாலட்சுமியை நமக..

இவ்வாறு தினம் தினம் சங்கிற்கும், சுதர்ஸன சக்கரத்திற்கும் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் பூஜை செய்துவர பல உன்னதமான பலன்களை கொடுக்கும். பூஜை செய்த சங்கையும், சுதர்ஸன சக்கரத்தையும் எடுத்து தொழில் ஸ்தாபனங்களில் வைக்கலாம் அல்லது நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கலாம். இவ்வாறு செய்துவர தொழிலில் வெற்றிவாகை சூடலாம். 
சங்கு என்றால் எந்த சங்கை வைக்கலாம்?
வலம்புரி சங்கு மகத்துவம் வாய்ந்தது. சங்கின் நுணி வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும். சங்கு முழுவதும் சில்லரை காசுகளை நிரப்ப வேண்டும். பக்கத்தில் சுதர்ஸன யந்திரத்தையும் வைத்து அதன்மேல் சில்லரை காசுகளை வைக்க வேண்டும். இரண்டையும் ஒரே தட்டில் வைப்பது நல்லது. அதன் மேல் குங்குமத்தால் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். அந்தக் குங்குமத்தை தினமும் நெற்றியில் ஈட்டுக்கொள்ளலாம். 
இவ்வாறு தினமும் சங்கு, சக்கரத்தை வைத்து பூஜித்து ஆராதனை செய்துவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். தொழிலில் வீழ்ச்சியில்லாத மிகப்பெரிய சாம்ராஜியத்தை அடைய முடியும். 

Sunday, January 24, 2021

எளிய பரிகாரங்கள் வலிமையான பலன்கள்

1.தினசரி காகத்திற்கு உணவிடுங்கள்.

2.தினசரி பறவைகள் உண்ண தானியங்களும்,குடிக்கத் தண்ணீரும் வையுங்கள்,

3.அரசு,வேம்பு, நெல்லி, வன்னி  மரங்கள் அருகில்  இருந்தால் ஜலம் விடுங்கள்.

4.பசுவிற்குப் புல்லோ,அகத்திக்கீரையோ அளியுங்கள்.

5.எறும்புகளுக்கு அரிசிக் குறுணை அல்லது அரிசி மாவு போடுங்கள் .

6.நாய்களுக்கு பிஸ்கட்டோ,மீதியான சப்பாத்திகளையோ போடுங்கள்.

7.மீன்களுக்குப் பொறி போடுங்கள்,

8.குரங்களுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.

9.கோயில் தீபத்திற்கு எண்ணெய் கொடுங்கள்,

10.ஊனமுற்றவர்களுக்கு உங்கள் பழைய ஆடைகளைத் துவைத்தபின் வழங்குங்கள்.

11.அன்னதானம்,நீர் மோர்,தண்ணீர் பந்தலுக்குப் பணம் கொடுங்கள்

12.காலையில் சூரியனைப் பாருங்கள்.

இதையெல்லாம் அவசியம் தினம் செய்யுங்கள்
நல்லதே நடக்கும்

நான் செய்கிறேன்

இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.

Saturday, January 23, 2021

தினமும் இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னால் போதும் செல்வம் கொட்டும்.

*ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்


மகரிஷி வசிஷ்டர் செய்த கடும்தவத்தின் போது அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றி இந்த மந்திரத்தை உபதேசித்தார்கள்.இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து ஜெபித்து வருகிறாரோ அவரை ஒருபோதும் வறுமை பீடிப்பதில்லை என்று அருளியதோடு தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கூட நான் அவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன் என்று ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

இந்த மந்திரத்தை முன்பு ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் இந்தத் தகவல் விடுபட்டதால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

மந்திரம் 

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|
மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !

Thursday, January 21, 2021

சுப காரியங்கள் செய்வதற்கு பொருத்தமான சில நட்சத்திரங்கள்

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம் ?
1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் .
2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் .
3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் .
4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் .
5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் .
6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டாலும் காயமின்றி தப்பிக்கலாம் .
7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் .அறுவை சிகிச்சை செய்வதற்கும் ,டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதற்கும் இந்த விதி பொருந்தும் .
8,மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால் கைராசிக்காரன் என்ற பெயரை எளிதாகப் பெற்றுவிடலாம் .
9, மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்தால் படிப்பறிவு அதிகமாக வளரும் .தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும் .
10, மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம் ஆகும் .
இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியை தரும்.

Wednesday, January 20, 2021

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்

 பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும்.மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.
600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 41க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லகாது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர்.

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த “முண்டாசுக்கவிஞன்’ பாரதி , இந்த விநாயகரை போற்றி; “நான்மணிமாலை” என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.

ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; 'மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது 'ஸ்ரீமணக்குள விநாயகர்’ என்கிறோம்!
கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர்.அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது.

அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங் களையும் நடத்தி வந்தனர்.பிரெஞ்சு ஆட்சியாளர் களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.

இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது.

மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே.
மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார்.வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனி யில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்து ள்ளன.மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது.கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையா டல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.

தங்கத்தேர் உலாவும் உண்டு.அனைத்து மதத்தி னரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள்.தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி.பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது.இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Tuesday, January 19, 2021

லலிதா சகஸ்ர நாமம் சொல்லும் போது ஏற்படும் மாற்றங்கள்.

லலிதா சகஸ்ரநாமம் கூறும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் 

லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு,  அவளை வழிபட யந்திரம்,  மந்திர பரிவார தேவதைகளின் நிலை,  வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

"ஸ்ரீ மாதா" என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள், எப்படித் தோன்றினாள்? 

அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க, தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் தோன்றினாள். 

சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல்,  சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. 

நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்'  என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது. 

சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. கீழிருந்து எழும்பிய சக்தி,  சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது. 

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவையெல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது. 

இப்பொழுது புரிகிறதல்லவா? நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை? 

விழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய, ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப்படுத்தப்பட்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம். நிறைவான வாழ்வினைப் பெறுவோம்.

Monday, January 18, 2021

கருட பகவானைப் பற்றி அருமையான தகவல்கள்

🦅🦅🦅🦅🦅கருடன் பகவான் பற்றிய அரிய 101 தகவல்கள்🦅🦅🦅🦅🦅

💐பக்ஷி ராஜாய நமஹ💐

1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்),

 சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

3. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே 
கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப்
 பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.

7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி - பிராகாம்யம் ஆகிய எட்டு 
விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் 
நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் 
கருடோபாசனையே காரணம்.

12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக 
சரித்திரம் சொல்கிறது.

13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், 
மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், 
சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

14. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். 
இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு 
சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.

17. குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் 
பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் 
காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

18. சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.

19. உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.

20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. 
இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில்
 வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் 
நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் 
மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. 
இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது.
 மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை
 அடைய முடிந்தது.

25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த 
தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக 
அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.

26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். 
திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் 
காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில்
 சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால்
 பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு 
அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி 
அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை 
சாதிக்கிறார்கள்.இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.

29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும்,
 அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் 
திருக்குறுங்கடி.

31. கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் 
செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.

33. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!

34. கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!

35. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக 
உணரலாம்.

37. கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

38. எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.

39. கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.

40. நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.

41. எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது 
என்பது பலரது அனுபவமாகும்.

42. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர்.
 கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் 
கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு 
வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி 
வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.

46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது 
கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.

47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை 
அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.

48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, 
நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.

49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர
 வைக்கும் சக்தி உண்டு.

50. சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.

51. ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.

52. வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.

53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் 
கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.

54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில்
 வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.

55. கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.

56. திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

57. கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை
 செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் 
என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்.

58. கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.

59. ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.

60. பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.

61. கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.

62. கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். 
ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.

63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது 
காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.

64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின்
 பரம்பரை வாரிசு.

65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை 
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர 
வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.

67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட '
தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.

68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை 
கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

70. ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.

71. கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.

72. வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.

73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், 
ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

74. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி
 ராஜன் என்றும் பெயர்.

75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

76. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு 
விநதேயன் என்ற பெயரும் உண்டு.

77. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். 
அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

80. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

82. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் 
சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை
 நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

85. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய 
தேவதை கருடனே.

86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை 
வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் 
கூறுகிறது.

88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.

90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!

ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.

92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்

93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.

94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.

95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.

(குங்குமோங்கித வர்ணாய
குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹன நமஸ்துப்யம்
* பக்ஷி ராஜாயதே * நமஹ)

96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். 
சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.

97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம், 
காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் 
பதிந்திருந்ததால் கருடனால் எந்த
 ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் 
சிறப்பு வாய்ந்தது.

99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் 
அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

100. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

101. *பலரும் கருட பகவான் ஓர் விஷ்ணு பக்தர் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர் மிகச்சிறந்த சிவபக்தர், தவ சிரேஷ்டர்.*

Sunday, January 17, 2021

ஏன் தியானம் கண்டிப்பாக செய்ய வேண்டும்?

#தியானம்

மனக்குதிரைக்கான மந்திரம்!!!!! 

வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் படுத்தி எடுக்கிறது மன அழுத்தம். இதன் விளைவு,  ரத்த அழுத்தம், சர்க்கரைக் குறைபாடெல்லாம் வெகு சீக்கிரமே  குடியேறி விடுகின்றன.  நோய் தரும் வலிகளும் இழப்புகளும் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை இளம் தலைமுறை மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. அதைத் தொடர்ந்து உணவும் வாழ்க்கையும் இயற்கையின் பக்கமாகத் திரும்பிருக்கின்றது. ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள எளிய யோகா பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மனதுக்குத் தியானம், வயிற்றுக்கு உணவு,  உடலுக்கு யோகாசனங்கள் என இளைஞர்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது.  

யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு குழப்பம் நிலவுகிறது. ‘தியானம், சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் தான் கைவரும். நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எல்லாம் தியானம் செய்ய முடியாது’ என்று கருதுகின்றனர். இதற்குக் காரணம் உள்ளது. தியானத்தின் போது எண்ண ஓட்டங்களை நிறுத்தி மனதை அமைதிப்படுத்த வேண்டும். எதையும் நினைக்கக் கூடாது என்று கண்களை மூடினால் எண்ண அலைகள் கடலாய் மாறிக் கலங்கடிக்கும். ‘‘எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தெரியாமல்தான் மக்கள் இப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். ஆனால், தியானம் அவ்வளவு கடினம் இல்லை. 

“தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம்” என்பதோடு மட்டுமல்லாமல், மனம் எனும் குதிரையை இழுத்துக் கட்டுவதற்கான மந்திரங்கள் உள்ளது.

‘‘உங்களுக்குள் பயணித்து நீங்கள் யார் என்பதை உணரச் செய்வதே  தியானத்தின் நோக்கம்.  இறுதியில் பேரமைதியை உங்கள் மனம் உணரும்.  ஒருவருக்கு  தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில் உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது. நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டி யதன் அவசியம் புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும். மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது. 

மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். அந்தச் சூழலைத் தெளிவாகக் கையாள்வதுடன் மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன் போன்ற வார்த்தைகள் உங்களை விட்டு விலகி நிற்கும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது. இந்த ரசாயனங்கள் உங்களது ஹார்மோன் மாற்றங்களுக்குக் காரணம் ஆகின்றன. ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் நம் மனநிலையையும் உடல் நிலையையும் பாதிக்கின்றன. மனம் சமநிலையில் இருக்கும்போது உங்களுக்குள் அதிகமாக பாசிட்டிவ் அதிர்வலைகளை உணர முடியும். மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் இப்படியான ஒரு நிலைக்கு உங்கள் மனம் நகர வேண்டும். தியானத்தின் வழியாகவே இந்த நிலையை நீங்கள் அடைய முடியும். 

பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது. ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும். 

மூச்சுப்பயிற்சியின்போது உள் இழுக்கும் காற்று, நம் உடலுக்குள் பயணிப்பதை உணர வேண்டும். அதேபோல் வெளிவிடும் காற்றின் பயணத்தையும் கவனிக்கும்போது மனமும் மூச்சும் ஒற்றைப்பாதையில் பயணிக்கத் துவங்கும். மனம் ஒரு விஷயத்தில் ஆழமாய் பயணிக்கும்போது எண்ண அலைகள் ஓய்வெடுக்கும். மனதில் நடக்கும் உரையாடல் மௌனமாகும். இப்படித் தான் எண்ண அலைகளைப் பேரமைதிக்கு இழுத்துச் செல்ல முடியும். தியானத்தில் அமர்ந்து பேரமைதி நிலையை அடைய முடியும். 

‘‘இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஏன் இவ்வளவு டென்ஷன் என உங்களிடம் நீங்களே கேட்டுப்பாருங்கள், விடை கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாத காரணத்தால்தான் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நம்மையும் சேர்த்துக் கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். எல்லோரும் நம்மைப்போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மன மாசுக்களை நம் மூளையில் ஏற்றுவதால் ஏற்படும் அழுத்தம், நம்மைப் பாதி மனநோயாளியாக மாற்றி விடுகிறது. மற்ற உடல் நோய்கள் நம்மை எளிதில் தாக்குவதற்கான வழிகளையும் இதுவே திறந்து வைக்கிறது. தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்’.

எந்த வயதில் தியானம் செய்யலாம்?

எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும். 

எந்த நேரம் நல்ல நேரம்?

அவரவருக்கு விருப்பமான நேரத்தைத் தியானத்துக்குத் தேர்வு செய்யலாம். பிரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரை தியானத்துக்கு மிகவும் உகந்த நேரம். இந்த நேரத்தில் பறவைகள் கத்தும் ஒலிகள்கூட இருக்காது. மாலை மற்றும் இரவு நேரத்திலும் தியானம் செய்யலாம். 

எண்ணங்களை இழுத்துக்கட்டும் கயிறு எது? 

நிறைய எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். கண்களை மூடி எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்கும் போது மனதுக்குள் ஓயாமல் கேள்வி பதில் போன்ற உரையாடல் நிகழ்வதைக் கவனிக்கலாம். மூச்சுப் பயிற்சியின் போது மூச்சுக்காற்று உள்ளே செல்வதைக் கவனிக்கலாம். எண்ணங்கள் ஓயாதபோது மனதுக்குப் பிடித்த வார்த்தையைத் தொடர்ந்து உச்சரிப்பதன் வழியாக அதில் மனதைச் செலுத்தலாம். இசையைக் கேட்டபடியும் தியானம் செய்யலாம். மனதுக்குள், எண்ணங்கள் கேள்விகள் எழும்போது அதற்கு எதிர்வினை செய்யாமல், பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம், தியானம் செய்யும்போது மனம் அமைதியடையும். எண்ணங்களற்ற நிலையை அடையலாம்.  

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம் செய்யலாமா? 

கண்டிப்பாக. அதுவும் சாத்தியமே. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பரபரப்பான துறைகளில் பணியாற்றுபவர்கள்  பயண நேரங்களைத் தியானம் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம். கார் அல்லது டிரெயினில் பயணிக்கும் போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்ப்பதையும் பாடல் கேட்பதையுமே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  யுடியூபில் தியானம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.  தியானம் பற்றிய யுடியூப் சானலை ஆன் செய்து ஹெட்போன் மாட்டிக்கொண்டு அதில் சொல்வதைச் செய்தால் போதும். இவ்வாறு செய்வதன் மூலம் பயணநேரம் வீணாவதால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்கலாம். தியானத்தின் வழியாக மன நிறைவும் மன அமைதியும் கிடைக்கும். 

உச்ச மனநிலையில் தியானம் செய்யலாமா? 

அதிகபட்ச கோபம், டென்ஷன், சோகம் போன்ற உச்ச மனநிலைகளில் தியானம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. கண்டிப்பாகச் செய்யலாம். அந்த உணர்வு நிலையின் தீவிரத்தை மெள்ள அமைதி நிலைக்குக் கொண்டு வர தியானமே சிறந்த வழி. நமது நன்மைக்காகவும் உச்ச மனநிலையில் இருந்து வெளியில் வரவும் இதைச் செய்யப் போகிறோம் என்ற மனநிலையுடன் கண்களை மூடி மூச்சுப் பயிற்சியைச் செய்தபடி தியானத்தைத் தொடருங்கள். மெள்ள மனம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தியானம் செய்யலாமா? 

மாதவிடாய்க் காலத்தில், தான் ஒதுக்கி வைக்கப்பட்டதாகப் பெண் நினைக்க வேண்டியதில்லை. அந்தக் காலகட்டத்தில் பெண்ணுடலில் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மனநிலை மாற்றங்கள் நடக்கும். மாதவிடாய் நேரத்தில் யோகாசனங்கள் செய்யக் கூடாது. ஆனால், மூச்சுப்பயிற்சி செய்யலாம். தியானம் செய்யும்போது மாதவிடாய்க் கால வலிகளை மனம் கவனிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகளையும் புரிந்துகொள்ள முடியும். தியானம் செய்வதால் அந்த நேரச் சிரமங்களை மனம் ஏற்றுக்கொள்ளும். மாதவிடாய்க் காலத்தில் பெரிய அளவில் டென்ஷன் இன்றிக் கடக்க தியானம் பெண்களுக்கு உதவும். 

புதிதாக தியானம் செய்யத் தொடங்குபவர்கள் கவனிக்க: 

உங்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்யுங்கள். நேரம் இல்லை என்பவர்கள் வழக்கமாக எழும் நேரத்தைவிட அரைமணி நேரம் முன்னதாக எழ முயற்சிக்கலாம். காலைத் தியானத்தின் போது  தூக்கக் கலக்கத்தில் இருந்து வெளியில் வர எளிய யோகா பயிற்சிகள் செய்யலாம். பின் மூச்சுப்பயிற்சி, அடுத்து தியானம் என வழக்கப்படுத்திக்கொண்டால் எளிதாகும். தியானத்துக்கு முன் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்தே தியானத்தில் அமர வேண்டும். 

தியானத்துக்குப் பதிலாக... 

தியானம் செய்யக்கூட நேரம் இல்லை என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவர்கள்கூட தன் எண்ணங்கள்மீது கவனம் செலுத்த வேண்டும். இரவில் படுக்கைக்குச் சென்றபின் தூங்கும் முன்பாக இதைச் செய்யலாம். நன்றாக உடலை நீட்டி இலகுவாகப் படுத்தபடிக் கண்களை மூடிக் கொள்ளவும். நான்கு முறை மூச்சை நன்றாக இழுத்துவிடவும். மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும்படியாக காலை முதல் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று வரிசைப்படுத்துங்கள். இரண்டாவதாக,  மற்றவர்கள் மனம் கஷ்டப்படும்படியாக என்னென்ன செய்தீர்கள் என்று வரிசைப் படுத்துங்கள். உங்களால் காயம்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பதோடு அவர்கள் மகிழும்படியாக என்ன செய்யலாம் என்று திட்டமிடுங்கள். இதனை வழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் மனம் பாசிட்டிவ் எண்ணங்கள் நிரம்பியதாக மாறும்.  

தியானத்தில் எத்தனை வகை?   

தியானத்தை நாம் எந்த நோக்கத்துக்காகச் செய்கிறோம் என்பதில்தான் அது வேறுபடுகிறது. உடல் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்து மீட்க வெவ்வேறு பயிற்சித் திட்டங்கள் உள்ளன. சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுக்குள் வைத்தல், மாதவிடாய்க் கோளாறுகள், ரத்த அழுத்தப் பிரச்னைக்குத் தீர்வு காணுதல், மன அழுத்தம் குறைத்தல் எனப் பல பயிற்சித் திட்டங்கள் உள்ளன. அவரவர் தேவைக்கு ஏற்ற உணவுத் திட்டம், யோகாசனப் பயிற்சிகள் மற்றும் தியான முறைகள் வழியாகத் தீர்வு காண முடியும். உங்களை வெறுப்பவர்களின் எண்ணிக்கை குறையும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். நீங்கள் மகிழ்ச்சியாக உணரும்போது உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் அது தொற்றிக் கொள்ளும். அன்பு சூழ் உலகுக்கான அழகிய மந்திரமே #தியானம்.

Saturday, January 16, 2021

வராகி அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா

வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வணங்குவது நல்லதா . . . ?

வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால் , இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள் .
நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை . குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல் , கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன்.
பொதுவாகவே கிருத்திகை , பூரம் , மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும் . அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும் . இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள் , இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறந்தது .
நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும் , தீராத நோயாக இருந்தாலும் , தீராத மன கஷ்டம் , பணக்கஷ்டம் , எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து , அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து , அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு , தீபம் ஏற்றினால் போதும் . இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம் . கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம் .
வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும் . பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும் .
வராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை , நவதானிய அடை , மிளகு சேர்த்த வடை , வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை தோசை, நிலத்தின் அடியில் விலையும் கிழங்குகள், காய்கள் போன்றவற்றை நிவேதனம் செய்வது சிறப்பு.

Friday, January 15, 2021

கடவுள் ஏன் கெட்டதையும் படைத்தார்.

நல்லதை படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்?*
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
 சில கேள்விகளுக்கு, நாம் என்ன தான் சிந்தித்தாலும் அதற்கான விடையை முழுமையாக ‘தெரிந்து’ கொள்ள முடியாது. ஆனால், அந்த கேள்விகளுக்கான விடையை ‘புரிந்து’ கொள்ள முடியும். ‘இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்! 
நல்லதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, எதற்காக கெட்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’? என்றாவது இந்த கேள்வியை நாம் சிந்தித்து பார்த்துள்ளோமா? இன்றைக்கு கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம்!!

*ஒரு சிறிய கதையோடு!*

குருவிடம் ஒரு மாணவன், இதே கேள்வியை கேட்டான்! அதற்கு, அந்த குரு என்ன விளக்கம் அளித்தார்? என்பதை நாம் தெரிந்து கொண்டால், தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? அந்த குரு, சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார். 

 சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு தட்டில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு, பின்வருமாறு விளக்கம் அளித்தார். ‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’ பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம்.  
சாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம். இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார். 

இறைவன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது. புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது. அனைவரும் சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும்.

Thursday, January 14, 2021

வலிகளே நம் வாழ்க்கையின் வழிகள்.

வலிகளே நல்ல வழிகாட்டி.

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்...

வலி வந்த போது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடு தான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டது தான் இந்த வாழ்க்கை...

உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போது தான் அழகான உடற்கட்டைப் பெற முடிகிறது...

இப்படித் தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போது தான் வளமான வாழ்க்கை வாழ முடியும்...

'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்...

'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகி விடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்தத் துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழிகாட்டியும் கூட...!

வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழி காட்டும்...

நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம் தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது...

வலிகளை வெற்றிகளாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...

ஆம் நண்பர்களே...!

அனைத்து வலிகளும் நம்மைப் பக்குவப்படுத்தவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...!

நாம் குறிக்கோளை எட்டிட வேண்டுமானால் சிறிய வலிகளைப் பொறுத்துத் தான் ஆகவேண்டும்...!!

வலிகளையும், இடையூறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்.

Wednesday, January 13, 2021

தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம்

தீராத நோயை தீர்க்கும் தீர்த்தம் !
*********************

சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும்,
சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில்
தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு
வந்தவர்கள், மலையில் ஒரு சிவலிங்கத்தை
பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய
சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு
சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.

தலபெருமை:
************

மலையின் சிறப்பு: அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில்
இது. சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடை பிடிப்பது போல அமைந்த மலை இது.

பாறையை ஒட்டி சிறிய சன்னதியில் சிவன் காட்சி தருகிறார். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு
விசேஷ பூஜை நடக்கும்.

கோயிலுக்கு
அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக்
கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. பல
மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது.
வயிற்று வலி, தீராத நோயால்
அவதிப்படுவோர் நிவர்த்திக்க இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச்
செல்கின்றனர்.

அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள்
கிடையாது. கோயில் வளாகத்தில் வேம்பு,
வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும்
இருக்கிறார். இவருக்கு எதிரே தந்தைக்குரிய
நந்தி வாகனம் இருப்பது விசேஷமான
அமைப்பு.

தீப வடிவ குகை: சோமலிங்கசுவாமி
சன்னதிக்குப் பின்புறம், மெய்கண்டார் தவம்
செய்த குகை உள்ளது. பாறையில்
இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு
தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப்
போல அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின்
அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு
இடங்களில் உள்ளது.

பழநியில் முருகனுக்கு நவபாஷாண சிலை
வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம்
செய்துள்ளார். ஒரு சமயம் அவர் கௌரி பூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து
அங்கலட்சணங்களும் பொருந்திய பெண்
வேண்டுகின்றார். அத்தகைய பெண்ணைத் தேடிச்சென்ற கொங்கணர் மற்றும் கருவூரார் சித்தருக்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய
பெண் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் தந்திரமாக போகர் விரும்பியபடி ஒரு கல்லில் சிலை வடித்து, அதற்கு உயிர் கொடுத்து
அவரிடம் அழைத்துச் சென்றனர்.

 நடந்ததை தன் ஞானதிருஷ்டியில் அறிந்த போகர், அப்பெண்ணைப் பார்த்து “கல் நீ வாடி’ என அழைத்தார். கொங்கணரும், கருவூராரும்
தங்களை மன்னிக்கும்படி வேண்ட, போகர்
அவர்களை மன்னித்தருளினார். இவ்வாறு,
போகர் அப்பெண்ணை அழைத்ததால் கல்நீவாடி என்றே அழைக்கப்பட்ட ஊர், பிற்காலத்தில்
கன்னிவாடி என மருவியது. இந்த தகவல் ஜலத்திரட்டு என்னும் புராதனமான நூலில்
கூறப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:
*************

திருமணத்தடை, மாங்கல்ய தோஷம்,
பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிச்
செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:
**************

வேண்டுதல் நிறைவேறியதும் சிவனுக்கு
அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

முகவரி:
*******

அருள்மிகு சோமலிங்கசுவாமி திருக்கோயில்,
சோமலிங்கபுரம், கன்னிவாடி – 624705.
திண்டுக்கல் மாவட்டம்.✍🏼🌹

Tuesday, January 12, 2021

காப்புக்கட்டு சடங்கு என்றால் என்ன?

காப்புக் கட்டு சடங்கு. பொங்கல் பன்டிகைக்கு முன் போகி பன்டிகை அதாவது காப்பு கட்டு பற்றி தெரிந்து கொள்வோம்.

மாதங்களில் அழகிய மாதம்  மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை. தமிழர்கள் வாழ்வில்  வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து,  மண்ணுக்கும் கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம். மார்கழி மாதத்தின் கடைசி நாள்  போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன்  தை மகளை வரவேற்பது தமிழர் மரபு. 

இதோ இன்று போகி. இந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன், `காப்புக் கட்டு' என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது இதுவும் ஒரு சடங்குதான் நமக்கென்ன என நினைத்து, விரல் சொடுக்கில்  செல் இணைய உலகத்துக்குள் உலா போய்விடலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் சடங்குகளுக்குப் பின்னால் உள்ள  அறிவியலை உணர்ந்துகொண்டு, அடுத்த அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். 
படிப்பறிவு இல்லாத அந்தக் காலத்தில் அறிவியலைச் சடங்குகள் மூலமாகவே பாமர மக்களுக்குப் புரிய வைத்தார்கள் முன்னோர்கள்.  காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. இத்தனை மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. 

 காப்புக் கட்டில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகள் அரிதாகிவிட்டன. தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை இவை மூன்றும்தான் நவீனக் காப்புக் கட்டில் இடம் பெறுகின்றன. எத்தனையோ மூலிகைகள் இருக்க, இந்த மூன்று மூலிகைகள் மட்டும் ஏன் இடம் பெறுகின்றன? அந்த மூலிகைகளின் பலனைத் தெரிந்துகொண்டால், இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்குக் கிடைத்து விடும்.

 ஆவாரை: 

" ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ" என்கிறது சித்தர் பாடல். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. தரிசுகள் எங்கும் தானாக விளைந்து கிடக்கும் அற்புத மூலிகை. இன்றைக்கு உலகை உலுக்கி வரும் கொடிய நோய்களான சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்க்குத் தீர்வாக இருக்கிறது ஆவாரை. கிராமங்களில் ஆடு,மாடுௐ மேய்ப்பவர்கள், வெயிலினால் ஏற்படும் சூட்டைத் தனித்துக் கொள்வதற்காக, தலையில் ஆவாரை இலையை வைத்துக் கொள்வார்கள். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கிரீன் டீ யை விட, அற்புதமானது ஆவாரை நீர். கையளவு ஆவாரம் பூவை, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங் கருப்பட்டி கலந்து அருந்தினால், உடல் புத்துணர்வு பெறும். சரும நோய்கள் குணமாகும். ஆவாரை இலையை, கல்லில் வைத்து ஒன்று இரண்டாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால், உடல் சூடு, கண் வழியேௐ வெளியேறுவதை உணர முடியும். உடல் துர்நாற்றத்தைத் துரத்த, உடலை மினுமினுப்பாக்க, தலைமுடி வளர என ஆவாரையின் பயன்பாடு அநேகம். ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் ஒரு தேக்கரண்டி வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால் உடல் சோர்வு, நா வறட்சி, நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய்கள் குணமாகும். ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவுௐ கட்டுக்குள் வரும். இத்தனை அற்புதங்கள் இருப்பதால்தான் ஆவாரையைக் காப்புக் கட்டில் வைத்தார்கள். 

 சிறுபீளை: (பூளைப்பூ)

"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிது கற்பேதி யறி"

என்கிற பதார்த்த குணபாடம்(219) சிறுபீளையின்ௐ மகத்துவத்தை விளக்குகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இந்த மூலிகை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது இந்த மூலிகை. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் முன்னோர்கள். 

 வேப்பிலை:

வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத்ௐ தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான்  காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள்.

இப்போது புரிகிறதா..? காப்புக் கட்டு வெறும் சடங்கு மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது நம்ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு. இந்த அறிவைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியது நம்ௐ அனைவரின் கடமை. இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இன்று காப்புக் கட்டும் போது, அதை எதற்காகக் கட்டுகிறோம் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் போதும். 

பழைய பிளாஸ்டிக்,டயர் மற்றும் குப்பைகளை எரிப்பது மட்டும் போகிப்பண்டிகை அல்ல. அது காற்றை மாசுபடுத்தும் சுகாதாரக்கேடு. உண்மையில் அது நம் மனதில் உள்ள 
 காமம்
 கோபம்
 சுயநலம்
 கர்வம்
 பொறாமை
ஆகிய பஞ்சமா பாதகங்கள் என்னும் குப்பைகளை  முழுவதும் எரித்துப் போக்கி விடுவதுதான் போகிப்பண்டிகை.
🌹🌻🙏🏻MPK🙏🏻🌻🌹

Monday, January 11, 2021

எதிர்பார்ப்பதை விட்டு விடுங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

*எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள்:-*

எதிர்பார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. 

மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். 

அது எப்படி வருகிறது எனில் கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். 

எனக்கு இப்படி வர வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையான எதிர்பார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கிறது எல்லாம் நாம் செய்ததினுடைய செயல் விளைவாகத்தான் கிடைக்கிறது. 

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று நீங்கள் யோசித்துச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக் கொள்ளலாம். 

உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். 

பிறருக்கு மனப்பூர்வமாக எந்த அளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும் மன அமைதியும் ஆற்றலும் உண்டாகும்.

பொருளைக் கொடுத்துத்தான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ அந்த ஆற்றலைக் கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலே, பொருளாலே, பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.

காலையிலும் மாலையிலும் இந்த உலகம் சமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்த முடியாதா? அதைச் செய்யலாமே. 

அம்மாதிரி எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டே இருப்போமானால் மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும். 

நீங்கள் கவனித்து பார்த்தீர்களானால், எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் மனதளவில் ஏழ்மையில்தான் இருப்பார்கள். 

நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக் கொண்டு என்னென்ன வகையில் பிறர்க்கு சேவை, உதவி, செய்ய முடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
.

இதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் மேலும் மேலும் ஆற்றல் வளரும். செல்வமும் வளரும், மகிழ்ச்சியும் நிறைவும் வளர்ந்து கொண்டே போகும். 

*எதிர்பார்த்தல் ஏமாற்றம்:*

"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண 
எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".

*மனநிறைவு :*

"எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது 
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில் 
எதிர்ப்பின்றித் தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும் 
எச்செயலும் மனவலிவு நுட்பத்தோடு ஆகும் 
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும் 
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும் 
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி 
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்."

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

Sunday, January 10, 2021

வாழ்க்கைக் காலத்தில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவஸ்தலம்.

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய #சிவஸ்தலம்..!

ஒரு வருடம் பழமும், 
ஒரு வருடம் சருகும், 
ஒரு வருடம் தண்ணீரும், 
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். 

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.

 
எதுவுமே இங்கு தேவையில்லை. 

ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். 

பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.

இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும், 
இரண்டு நாள் தங்கினால் 
இப்பிறப்பில் செய்த பாவமும், 
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.

ஞாயிறன்று இங்கு சூரியனை 
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். 

திங்களன்று சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். 

வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.

வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர். 

சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்
பிறரை ஏமாற்றியிருந்தால் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும். 

இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழ பகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.

இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு. 

இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும். 

ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும் 

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.

இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும். 

இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். 

இத்தலம் எதுவென 
இன்னும் புரியவில்லையா?  

சங்கரனாகிய சிவனும் 
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது. 

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்… 

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு 
எப்படி செல்வது?

சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.            

Saturday, January 9, 2021

மனைவி என்னும் தெய்வத்தை போற்றுங்கள்

*மனைவி எனும் தெய்வம்*

எழுபத்தைந்து வயதில் ஆதரவு இன்றி நிக்குது மனசு...

நாற்பதைந்து வருடம் ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்...

என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்...

அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...

ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு  ஊட்டி இருக்கலாம்...

ஒரு நாளாவது அவளுக்கு பதில் நான் அவளது துணியையும் சேர்த்து  துவைத்து இருக்கலாம்...

ஒரு நாளாவது TVயையும், Mobilலையும்  அணைத்துவிட்டு, அவளை  கொஞ்சி இருக்கலாம்...

ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும், எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...

ஒரு நாளாவது என் விடுமுறை நாட்களில் அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்...
ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...

அவள் விரும்பி கேட்காத போதும் ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...

ஒரு மாசமாவது என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...

ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...

நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்..

நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...

அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...

அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் அவளை கவனித்து இருக்கலாம்...

அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...

என்...
தாயே.!.
தாரமே.!.

நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...

என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...
தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கும் சினம் வருது...

என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...

நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...
ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது உனக்கு வாங்கி தராதவன் நான்...

மூச்சு இழந்த உன் புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் 
மன்னிப்பு கேட்கிறேன்...

மனைவியே.!.
என்னை மன்னித்து விடு...

மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு...

நான் உன்னை கொண்டாட வேண்டும்...

எழுபத்தைந்து வயதில் இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க...

உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்.!.
வாழ்க்கை வசந்தமாகும்.!

🌷🌷

Friday, January 8, 2021

சிவன் அர்த்தநாரீஸ்வர ராய் ஏன் ஆனார்?

🏵️ சிவன் அர்த்தநாரிஸ்வரர் ஆனது ஏன்? 

ஒரு முறை கயிலாயத்திற்க்கு சிவபெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர் தேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும்  வலம் வந்து வணங்கிவிட்டு போனார். 

இதை பார்த்து துணுக்குற்ற பார்வதிதேவி அடுத்தமுறை முனிவர் வந்தபொழுது இறைவனை விட்டு பிரியாமல் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டார். முனிவரோ ஒரு வண்டு வடிவம் எடுத்து இறைவனின் திருமுடியை மட்டும் சுற்றி வலம் வந்து வணங்கிவிட்டு போனார்.

முனிவரின் செய்கையால் வருத்தம் அடைந்த தேவி அந்த முனிவர் என்னை ஒதுக்கிவிட்டு தங்களை மட்டும் வலம் வந்து வணங்கி விட்டு போகிறார். நீங்களும் எதுவும் சொல்லாமல் இருக்கிறீர்களே உங்களை வணங்கிய பிருகு முனிவர்  எம்மையும் வணங்காது அலட்சியப்படுத்தியது சரியா எனக்கேட்டார்.  

உலக இன்பங்களை விரும்பி இருந்தால் உன்னையும் வணங்கி இருக்க கூடும். முனிவர் மோட்சத்தை மட்டுமே கருதி வந்ததால் என்னை மட்டுமே வணங்கி  வழிபட்டிருப்பார் போலிருக்கிறது என்று பதில் அளித்தார் இறைவன். 

ஈசனின்  சமாதானம் அன்னைக்கு ஏற்புடையதாக இல்லை. ஈசனை  விட்டு தம்மை தனியாக பிரித்தது பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெற்று விட்டால் தம்மை பிரிக்க முடியாதல்லவா என்று நினைத்தார். தனது எண்ணம் ஈடேருவதற்காக  தவம் மேற்கொள்ள நினைத்தார். 

பூவுலகில் திருமறை காட்டை (வேதாரண்யம் ) அடுத்து எட்டு திக்குகளிளும் சிவ ஸ்தலன்களால் சூழப்பட்ட எட்டி வனத்தை தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தார்.

வால்மீகி முனிவர் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருப்பதையும் புற்று அவரை மூடி  கொண்டிருப்பதையும் கண்டார். முனிவரின் தவ வலிமையால் ஒரு காந்த சக்தி வனம் முழுவதும் பரவி இருப்பதை தேவி பார்த்தார். அந்த இடமே  நாம் தவம் செய்ய உகந்த இடம் என்று உணர்ந்து வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு அருகிலேயே ஒரு எட்டி மரத்தின் கீழ் அமர்ந்தார் தேவி.  

புற்றிலிருந்து  வெளியேறிய முனிவர் ஆசிரமத்தின் அருகில் உமையம்மை தவக்கோலத்தில் வீற்றிருப்பதை  பார்த்து அவரை வணங்கினார். இறைவன்  திருமேனியில் இடம் பெறுவதற்காக தாம் தவம்  செய்ய  வந்திருப்பதாக தேவி கூறியபொழுது கேதாரீஸ்வரர் விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமானை திருப்தி செய்தால் வேண்டிய வரத்தை பெறலாம் என முனிவர் யோசனை கூறினார். 
  
வனத்தில் தேவி சிவலிங்க பிரதிஷ்டை செய்து புரட்டாசி மாதத்து  மாதத்து வளர்பிறையில் இருந்து  தொடங்கி ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி வரை விரதம் இருந்து சிவபெருமானை வழி பட்டு வந்தார். தேவியின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த இறைவன் தேவி வேண்டியபடி தமது திருமேனியில் இடப்பாகத்தை தேவிக்கு அளித்து விடுகிறார். . இறைவனும் இறைவியும் ஒன்று சேர்ந்த அந்த அந்த திருஉருவம் தான்  அர்த்தநாரீஸ்வரர்.

🙏