Monday, July 13, 2020

போகர் சித்தரின் வழிபாடு

அன்பர்களே, இந்த அற்புதமான ஜோதிட தொடரிலே,சித்தர்கள் வரிசையில் நாம் இடைக்காட்டுச் சித்தர்,சிவவாக்கிய சித்தர், கருவூரார் சித்தர், கஞ்சமலை சித்தர்.கடுவெளிச் சித்தர்,அகப்பைச்சித்தர் என்று பார்த்து வருகிறோம்.

அவரைத்தொடர்ந்து நாம் இன்று காணவிருக்கும் சித்தர் போகர் சித்தர்"

அவர்

போகர் யாரென்றால், சீன தேசத்திலே. ஒரு சலவைத்தொழிலாளியின் குடும்பத்திலே பிறந்த அருமையான ஒரு சித்தர். இவரை இன்றும் சீன தேசத்திலே, "போயாங்" என்ற பெயரிலே ஒரு தலை சிறந்த ஞானியாகவும், சித்தராகவும் சீன மக்கள் வணங்கி கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட போகர் சீனாவிலிருந்து நம் இந்திய தேசத்திற்கு வந்து பலரை வாழவைத்தார்.

திருமூலரின் காலத்திலே இவர் இருந்தார் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி குறிப்புகள் கூறுகின்றன. இந்த போகர் சித்தரிடம் அறுபத்து மூன்று சித்தர்கள் சீடர்கள் பயின்றனர். அதில் போகருக்கு மிக முக்கியமான சித்தராக இருந்தவர்தான்

"புலிப்பாணி சித்தர்" இவர் இமயமலையிலே நவசித்தர்களிடமிருந்து மரணமில்லாத வாழ்க்கையின் ரகசியத்தைக் கற்று இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

போகர் பூனையை வைத்து வேதத்தை உரைக்கச்செய்தார். பூனை வேதத்தை உரைத்தது. குடிசைகளையெல்லாம் மாடமாளிகையாக மாற்றினார்

அப்படிப்பட்ட ஓர் அருமையான சித்தர் போகர். இவர், பழனியிலே கடுந்தவம் செய்து கொண்டிருந்தபோது, முருகப்பெருமான் தனது தங்கமான முகத்துடன் காட்சி அளித்தார்

போகரே, உம்முடைய தவநிலையை மெச்சினோம் மிக்க மகிழ்ச்சி. மேலும், எனக்கு நீங்கள் செய்து முடிக்க வேண்டிய ஒரு பணி என்னவென்றால், பழனியிலே நவபாஷாண சிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று ஒரு கட்டளையை இட்டார். அதன்படியே, தன் பிரதான சீடரான புலிப்பாணி சித்தர் மூலம், பல அரிய வகை மூலிகைகளை கொணர்ந்து, அதன் மூலம் முருகனுக்கு நவபாஷாண சிலையை இந்திய தேசத்திலே உருவாக்கியவர் போகர் ஒருவரேயாவார்.

தனக்கு சந்தேகம் தோன்றும் போதெல்லாம், முருகனின் கருவறைக்குச் செல்ல ஒரு பாதாள அறையை அமைத்து, முருகனிடம் அன்றாடம் உரையாடி, பல ரகசிய சித்தாந்தங்களை மக்களுக்கு வழங்கினார்

ஒருமுறை, அவரின் வாழ்விலே அவருக்கு விரக்தி ஏற்பட்டு, சீன தேசத்திற்கு திரும்பிச்சென்றார். நீண்ட நாட்களாகியும் தன் குருவை காணாத புலிப்பாணி சித்தர், தன் குரு சீன தேசத்திற்கு சென்றதை அறிந்து, அவரை நம் தேசத்திற்கே அழைத்து வந்து பழனியிலே, நிரந்தரமாக தங்கச் செய்து அவருக்குப் பல சித்துக்களை பெற்றுத் தந்தார்

அப்பேற்ப்பட்ட போகரை நீங்கள் வணங்கும்பொழுது எந்தெந்த பிரச்சினைகள் தீருமென்று பார்த்தால் நிலத்தகராறு, சகோதர,சகோதரி பிரச்சினை, ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய பிரச்சினைகள் போகரை வணங்குவதால் தீரும். மேலும், உங்களின் வழக்குகள், கடன் தொல்லைகள் அவரை வணங்குவதால் மறைகின்றன

அரசியலிலும் பெரும் செல்வாக்கைப் பெற போகரை வணங்கலாம். இரத்த சம்பந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் போகரை வணங்குவதால் அந்நோய் குணமாகும்

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், ஒரு செவ்வாய் தினத்திலே சிகப்பு வஸ்திரம், சிவப்பு மலர் சகிதமாக மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக இருக்கின்ற இம்மஹா போக சித்தர் முன் நின்று, சிகப்பு வஸ்திரத்தை சாற்றி, மலரை வைத்து அர்ச்சித்து வர வேண்டும். அத்துடன், "ஸ்ரீ மஹாபோக சித்தரே, போற்றி, போற்றி" என்று அதிகாலையிலோ, தூங்குவதற்கு முன்போ ஒரு பதினைந்து நிமிடங்கள் சொல்லி வர வேண்டும். அவ்வாறு சொல்வதன் மூலம் உங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் காணமற்போகும். இது உறுதி என்று கூறி அன்பர்களே, இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment