Showing posts with label இதுவும் கடந்து போகும். Show all posts
Showing posts with label இதுவும் கடந்து போகும். Show all posts

Thursday, September 3, 2020

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்.

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், 
எத்தனை தோல்விகள் , 
எத்தனை மகிழ்ச்சிகள் , 
எத்தனை துக்கங்கள் ...

எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள் , 
எத்தனை பகைவர்கள்*, 
எத்தனை உறவுகள்
நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. 
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமாற உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல. 
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது.,

"இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது..,

"இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,

"இதுவும் கடந்து போகும்"
என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.
அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,

"இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,

"இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,

அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்...