Showing posts with label அம்மனின் வித்தியாசமான கோலங்கள் உள்ள ஆலயங்கள். Show all posts
Showing posts with label அம்மனின் வித்தியாசமான கோலங்கள் உள்ள ஆலயங்கள். Show all posts

Saturday, October 17, 2020

அம்மனின் வித்தியாசமான கோலங்கள் உள்ள ஆலயங்கள்

அதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள்*

அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அதில் சில....

அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில்.

வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் தக்கோலம். அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.

கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.

துர்க்கையம்மனுக்கென்று தனிக் கோயில், மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.

அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.

பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு

திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளன.

திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.

கொல்லூரில் மூகாம்பிகையே அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.

அமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அம்மன் பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நீலோத்பலாம்பாள் முருகனின் தலையை தடவிய கோலத்தில உள்ளாள். அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் அம்மன் பெரியநாயகி சம்பந்தரை இடுப்பில் தூக்கிய நிலையில் பிரகாரத்தில் உள்ளாள்.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.

தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.

பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறாள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள கோகிலாம்பாள் இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

சிதம்பரம் தில்லை காளி கோயிலில் அம்மன் நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.

கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.